Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி.
இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டடம் ஒன்றை நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார்.
தற்போது அதற்கு 'தனுஷ் பிளாக்' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரையிலான தனது பள்ளிப் படிப்பு முழுவதையும் தனுஷ் இந்தப் பள்ளியில் தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டிடத்தை நடிகர் தனுஷ் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்வில், நடிகர் தனுஷ், அவருடன் இணைந்து படித்த ஒளிப்பதிவாளர் குமரன் மற்றும் 1999 பேட்ச் மாணவர்கள், தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்து ஆசி பெற்ற தனுஷ், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்..
இதே பள்ளியில் தனுஷுடன் எல்கேஜி முதல் பிளஸ் டூ வரை இணைந்து படித்தவர் ஒளிப்பதிவாளர் குமரன்.
இவரும், இவரது மனைவி லட்சுமி கிருபாவும் தனுஷுடன் ஒரே வகுப்பில் இணைந்து படித்தவர்கள் தான்.
அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டபின் ஒளிப்பதிவாளர் குமரன் கூறும்போது,
தனுஷும் நானும் என் மனைவியும் இங்கேதான் பத்தாவது வரை படித்தோம்.
பின்னர் வேறு பள்ளியில் நானும் தனுஷும் பிளஸ் டூ படித்தோம். அவர் சினிமாவுக்கு சென்றுவிட்டார்,நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு எதிர்பாராத விதமாக சினிமாவுக்கே வந்துவிட்டேன்.
ஒளிப்பதிவாளராக மாறி தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி', 'தங்கமகன்' ஆகிய படங்களில் பணியாற்றினேன். இந்த பள்ளியின் கட்டிட நிலை பற்றி தனுஷ் கேட்டறிந்து, தானாகவே முன்வந்து இந்த மிகப்பெரிய உதவியை செய்துள்ளார்.
இன்னும் பிற கட்டடங்களை சீரமைத்தும் காலியாக உள்ள இடத்தில் புதிய கட்டிடங்களையும் கூட கட்டித் தருவதாக அவர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறினார்.
Hindusthan Samachar / Durai.J