Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருமலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள வருடாந்திர சாலகட்ட பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவ விழா காலத்தில் திருமலையில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன.
இதில் அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் இடம்பெறுகின்றன.
மேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசன வசதிகளும் பிரம்மோற்சவ நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ காலத்தில் திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வதால், சாதாரண பக்தர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கவும், சாமி தரிசனம் சீராக நடைபெறவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக TTD அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரம்மோற்சவத்தின் போது ஸ்ரீவாரியின் வாகன சேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், பக்தர்கள் இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்களது திருமலை பயணத்தை திட்டமிட்டு, தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA