Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 05 ஆகஸ்ட் (ஹி.ச)
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக திருத்தப்பட்ட அலுவல் பட்டியலின்படி, வங்கியாளர் புத்தக சாட்சிய மசோதா 2026 மற்றும் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் திருத்த மசோதா 2026 ஆகிய இரு மசோதாக்களையும் பரிசீலித்து நிறைவேற்ற மக்களவை இன்று திட்டமிட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கியாளர் புத்தகங்கள் தொடர்பான சாட்சியங்களுக்கு சட்டப்பூர்வ கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட வங்கியாளர் புத்தக சாட்சிய மசோதா 2026-ஐ அறிமுகப்படுத்துகிறார். தற்கால டிஜிட்டல் வங்கி நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் விதிகளை புதுப்பிப்பதும் இந்த மசோதாவின் நோக்கமாகும்.
மேலும் அவர், பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007, வருமான வரிச் சட்டம் 2025 மற்றும் நிதிச் சட்டம் 2026 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வகை செய்யும் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் திருத்த மசோதா 2026-ஐ பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் கொண்டு வருகிறார்.
இதனிடையே, குடியரசுத் தலைவரால் கடந்த ஜூன் 5-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட வருமான வரி திருத்த அவசரச் சட்டம் 2026-க்கு எதிர்ப்பு தெரிவித்து, என்.கே.பிரேமச்சந்திரன் மற்றும் சௌகதா ராய் ஆகியோர் கொண்டு வந்துள்ள சட்டப்பூர்வ தீர்மானத்தையும் அவை விவாதிக்க உள்ளது.
மறுபுறம், மொத்தமாக கட்சி தாவுவதை தடுக்க புதிய கட்சித்தாவல் தடைச் சட்டத்தை கொண்டு வருவது குறித்து விவாதிக்க, அன்றைய அலுவல்களை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
இதேபோல், கடந்த ஜூலை 20-ம் தேதி புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b