Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தின் நிதி நிலையை வலுப்படுத்தவும், மாநிலத்தின் சொந்த வருவாய் ஆதாரங்களை பன்மடங்கு பெருக்கவும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்துள்ளது.
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையை குறைத்து, நிதி தன்னிறைவை எட்டுவதே இந்தக் குழுவின் பிரதான நோக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி வருவாயில் ஏற்படும் கசிவுகளைத் தடுப்பது, ஜி.எஸ்.டி மற்றும் வணிக வரிகளை நவீனப்படுத்துவது, புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் வரி தளத்தை விரிவுபடுத்துவது குறித்து இக்குழு ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட் என்பது வெறும் கணக்கு வழக்கு அறிக்கையாக மட்டுமின்றி, தமிழகத்தின் பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும் தொலைநோக்கு ஆவணமாக இருக்கும் என்றும், அதற்கு அலுவாலியா போன்ற தேசிய அளவில் அனுபவம் வாய்ந்த பொருளாதார வல்லுநரின் வழிகாட்டுதல் அவசியம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b