Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
பள்ளிக்கல்வித் துறைக்கு வெற்றிக்கழக அரசின் பட்ஜெட்டில்தான் உண்மையான நிதி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 2025–26ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை ரூ.42,351 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2026–27 இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், ஊதிய வரம்புகள் மற்றும் பிற செலவினங்கள் மிகை மதிப்பீடு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், இது உண்மையான செலவினத்தைவிட சுமார் ரூ.6,003 கோடி அதிகமாக மதிப்பிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த கணக்கீடுகள் சரிசெய்யப்பட்டு, தேவையற்ற நிதி உயர்வுகள் குறைக்கப்பட்டதாகவும், அதேநேரத்தில் 2025–26ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு உண்மையில் செலவிடப்பட்ட தொகையைவிட சுமார் ரூ.2,176 கோடி கூடுதலாக, மொத்தம் ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
நிதித்துறை செயலாளர் இதுகுறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளதாகவும், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ஒதுக்கப்பட்டுள்ள ரூ.44,527 கோடி திறம்பட பயன்படுத்தப்பட்டு, அதன் முழுப் பலன்களும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி நிர்வாகத்தைச் சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P