Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்கிறது.
சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 5) காலை 10 மணியளவில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
2026 -27ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், குடும்பத் தலைவிக்கு 2,500 ரூபாய், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4,000 உதவித்தொகை, அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயண திட்டம் உள்ளிட்ட த.வெ.க-வின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அந்தந்த துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஜூலை மாதத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, தமிழ்நாட்டின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம்பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, த.வெ.க அரசின் முக்கிய திட்டமான ‘வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம்’ தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு விவகாரம், காவிரி நதிநீர் பிரச்சினை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதாகி விடுதலை உள்ளிட்ட பரபரப்பான சூழலுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
தற்போது நிலவும் பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இன்று அவையைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிதிநிலை அறிக்கை தாக்கல் நிறைவடைந்த உடன், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று, எத்தனை நாள்கள் இக்கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
தொடர்ந்து நாளைய தினம் வியாழன் (ஆகஸ்ட் 6) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.
Hindusthan Samachar / ANANDHAN