Enter your Email Address to subscribe to our newsletters

ராஞ்சி, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் நிதியமைச்சர் ராதாகிருஷ்ண கிஷோர் இன்று அறிவித்துள்ளார்.
ராஞ்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அவர்களின் கவலைகளைக் கேட்டறியும். மாநில இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனிலும், அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதிலும் அரசு உறுதியாக உள்ளது என்பதே அரசின் தெளிவான செய்தி.
மாணவர்கள் விரைந்து அரசுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். பேச்சுவார்த்தைக்கு அரசு எப்போதும் தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துவிட்டது என்றார்.
முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு உரிய மற்றும் உணர்வுபூர்வமான நடவடிக்கை எடுக்க உறுதிபூண்டுள்ளது. அரசு ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளிலிருந்தே இந்த உறுதிப்பாடு தெளிவாகத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் இந்தப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஜேபிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் குற்றப் புலனாய்வுத் துறை மேலும் ஐந்து பேரைக் கைது செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
ஆட்சேர்ப்பு முறைகேடுகளின் முழு பின்னணியையும் கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. டிஜிட்டல் பதிவுகள், விண்ணப்பப் பதிவுகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b