Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
விமான டர்பைன் எரிபொருளில் (ATF) எத்தனாலை கலக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், பொறுப்பற்ற வதந்திகள் என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
எத்தனால் மற்றும் நிலைத்த விமான எரிபொருள் (Sustainable Aviation Fuel - SAF) இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை என்றும், இவற்றை ஒன்றாகக் குழப்பக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், SAF என்பது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) அங்கீகரித்த, உலகளவில் பயன்படுத்தப்படும் விமான எரிபொருள் என்றும், அது கடுமையான சோதனைகள் மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தரநிலைகளை பூர்த்தி செய்த பிறகே பயன்பாட்டுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விமானப் பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்புவது விமானப் பயணிகளிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் என்றும், பயணிகளின் பாதுகாப்பே மத்திய அரசின் மிக உயர்ந்த முன்னுரிமை என்றும் ராம் மோகன் நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P