Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் பிஎம்சி மருத்துவமனைகளில் வழக்கமான மருத்துவ சேவைகளை புறக்கணிப்பதாக பிருஹன்மும்பை மாநகராட்சி - மகாராஷ்டிரா பயிற்சி மருத்துவர்கள் சங்கம்
(பிஎம்சி மார்ட்) இன்று அறிவித்துள்ளது.
பயிற்சி மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து விவாதிக்க, பொது சுகாதார துணை மாநகராட்சி ஆணையர் சரத் உகாடே தலைமையிலான மூத்த பிஎம்சி அதிகாரிகளை சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் விடுப்புக் கொள்கை, கல்விக் கட்டண விலக்கு, உதவித்தொகை, விடுதி மற்றும் உணவக வசதிகள் உள்ளிட்ட நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
இந்த விவகாரங்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பிஎம்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனிடையே, பிஎம்சி மார்ட் மற்றும் மத்திய மார்ட் அமைப்பைச் சேர்ந்த கூட்டுக் குழுவினர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் மற்றும் மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் அதிகாரிகளை சந்தித்தனர்.
சிசிஎம்பி தகுதி பெற்ற பிஎச்எம்எஸ் பயிற்சியாளர்களுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சிலில் பதிவு வழங்கும் முன்மொழிவு குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், எந்தவித உறுதியான முடிவுகளும் அல்லது எழுத்துப்பூர்வ உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 6) முதல் மறு அறிவிப்பு வரும் வரை பிஎம்சி மருத்துவமனைகளில் பல்வேறு வழக்கமான சேவைகளை நிறுத்துவதாக பிஎம்சி மார்ட் அறிவித்துள்ளது.
வழக்கமான புறநோயாளிகள் பிரிவு சேவைகள், வழக்கமான உள்நோயாளிகள் பிரிவு சேவைகள், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகள், மத்திய ஆய்வக சேவைகள் மற்றும் காய்ச்சல் புறநோயாளிகள் பிரிவு சேவைகள் ஆகியவை நிறுத்தப்படும் சேவைகளில் அடங்கும்.
அதேவேளையில் அனைத்து அவசர மற்றும் தீவிர சிகிச்சை சேவைகளும் தொடர்ந்து செயல்படும் என்று சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அவசர மற்றும் விபத்து சிகிச்சை, அதிர்ச்சி சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவுகள், பிரசவ அறைகள், அவசர அறுவை சிகிச்சைகள், உயிர்காக்கும் நடைமுறைகள், அவசர ஆய்வக சேவைகள் மற்றும் இதர அத்தியாவசிய அவசர சேவைகள் வழக்கம் போல் தொடரும்.
சிசிஎம்பி தகுதி பெற்ற பிஎச்எம்எஸ் பயிற்சியாளர்களுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் பதிவு வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அலோபதி அல்லாத பயிற்சியாளர்கள் குறுக்கு மருத்துவ முறையில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டத்தை இயற்றி கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
புதிய விடுப்புக் கொள்கையை அமல்படுத்துதல், கல்விக் கட்டண விலக்கு, விடுதி வசதிகளை மேம்படுத்துதல், சுகாதாரமான உணவக சேவைகள் மற்றும் வளாக பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிஎம்சி பயிற்சி மருத்துவர்களின் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பன போன்ற முக்கிய கோரிக்கைகளையும் பிஎம்சி மார்ட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b