ரூ. 122.51 கோடி செலவில் ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ உருவாக்கப்படும் - அமைச்சர் வினோத் அறிவிப்பு
சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான தவெக அரசின் முதலாவது பட்ஜெட் நேற்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (ஆக.6) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டின்
Tamil Nadu Soil Health Conservation Mission


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான தவெக அரசின் முதலாவது பட்ஜெட் நேற்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (ஆக.6) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வேளாண் விளைப்பொருட்களுக்கு 100 சதவீதம் பயிர்க்காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4000 சிறப்பு ஊக்கதொகை வழங்கப்படும்.

வளமான மண்; வளமான வருங்காலம் என்பதால், மண்ணின் வளத்தை பாதுகாக்க ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ரூ. 122.51 கோடி செலவில் உருவாக்கப்படும்.

தரமான விதை! வளமான விவசாயம் என்ற அடிப்படையில், நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்புத் திட்டம் ரூ 34.72 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

AI உழவர் செயலி - ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் வழங்க AI அடிப்படையிலான உழவர் செயலி உருவாக்கப்பட்டு ஸ்மார்ட் வேளாண்மை குறிப்புகள் வழங்கப்படும்.

பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம் ரூ.203.64 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்க ‘தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்’ ரூ..63.81 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

1 கோடி விவசாயிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் மண் வள அட்டைகள் வழங்கப்படும்.

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’ரூ.7.61 கோடி மதிப்பீட்டில் இயங்கும்.

அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத் தினை (Quinoa), பாப்பரை (Buck Wheat) குலசாமை (Brown Top Millet) ஆகிய பயிர்களின் செயல்விளக்கத் திடல்கள் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

ரூ.27.21 கோடி மதிப்பீட்டில் பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ உருவாக்கப்படும்.

ரூ.36 கோடி செலவில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டம் ரூ.17.70 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டம் ரூ.7.35 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் ரூ.56.72 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 % கூடுதல் மானியம் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார், சூரிய சக்தி பம்புசெட்டுகள், 300 ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும்.

மழை, வெயிலிலிருந்து விளைபொருட்களைப் பாதுகாக்க 43,500 தார்ப்பாய்கள் வாங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b