Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தொகுதி மறுவரையறை காரணமாக தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு விஜய் தலைமை தாங்குகிறார். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளதாக பல்வேறு தரப்பிலும் கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்பட்டால் மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் கிடைக்க வேண்டிய இடங்களின் எண்ணிக்கை குறையும் என்றும், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் தொடர்ந்து குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்த பின்னணியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக எம்.பி.க்களுடன் விஜய் விரிவாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.க்களும் பங்கேற்பார்களா என்ற பெரும் எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்சினை என்பதால் கட்சி வேறுபாடுகளைக் கடந்து எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Hindusthan Samachar / vidya.b