Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக தேசிய சைபர் கிரைம் போலீசார் பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் மோசடிகளுக்கு உடந்தையாக கள்ளக்குறிச்சியில் உள்ள பிரபல தனியார் வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்கி அந்த வங்கியின் விபரங்கள் மற்றும் வங்கி கணக்கிற்காக கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்தையும் ஆன்லைன் மோசடி கும்பலுக்கு வழங்கி உள்ளது.
அதன் மூலமாக மாதம் மாதம் கமிஷன் தொகை பெற்று வந்த கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காரனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி ஆகிய இருவரை கள்ளக்குறிச்சி காவல் நிலையப் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள பிரபல வங்கிகள் வங்கி கணக்கை தொடங்கி ஆன்லைன் மோசடி கும்பலுக்கு தங்களது வங்கி கணக்கை கொடுத்து மாத மாதம் கமிஷன் தொகை பெற்று வருவது உறுதியானது.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மணிகண்டனின் வங்கிக் கணக்கில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 700 ரூபாய் முறைகேடாக பரிவர்த்தனை நடைபெற்றதும், அதேபோல் சக்தி என்பவரது வங்கிக் கணக்கில் 51 ஆயிரத்து 119 ரூபாய் முறைகேடாக பரிவர்த்தனை நடைபெற்றதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் மோசடி கும்பலுக்கு உறுதுணையாக வங்கி கணக்கை தொடங்கி வழங்கி அவர்களின் மோசடிக்கு உறுதுணையாக இருந்து வந்த மணிகண்டன் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் மோசடிக்காக தங்கள் பெயரில் வங்கி கணக்கை தொடங்கி வழங்கி மோசடிக்கு உறுதுணையாக இருந்து வரும் நபர்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN