Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர்கள் இரண்டாவது நாளாக இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவும் தொகுப்பூதிய முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீண்ட காலமாக காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டையை தொடர்ந்து செங்கல்பட்டு, தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பிய அவர்கள், அரசு தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தொகுப்பூதிய முறையால் செவிலியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் நோயாளிகளுக்கு சேவை வழங்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தெரிவித்தனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b