Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,
கலைஞர் எண்பது ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர் என்றும், அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஒரு பேரியக்கத்தின் தலைவராகவும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அழியாத முத்திரை பதித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்றும், அரசியல், ஆட்சி, கலை, இலக்கியம், திரைப்படம், நாடகம், சின்னத்திரை மற்றும் சமூக வலைதளம் என அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்த நிரந்தர தமிழ் ஆளுமை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
இறுதியாக, கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமாக நிறைந்த நாள் இன்று. அவர்தான் நமக்கு எல்லாம்; அவரின்றி நாம் இல்லை என்று குறிப்பிட்டு, #KalaignarForever என்ற ஹேஷ்டேக்குடன் தனது அஞ்சலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam