Enter your Email Address to subscribe to our newsletters

கேரளம், 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா அருகே, தனியாருக்குச் சொந்தமான கைவிடப்பட்ட குவாரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மூவாற்றுப்புழா அருகே உள்ள மராடி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கைவிடப்பட்ட குவாரி ஒன்று உள்ளது.
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அந்த குவாரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில் குவாரியில் இருந்த 50க்கும் மேற்பட்ட பாறைகள் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் குவாரியின் மேலும் சில பகுதிகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குவாரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்கனவே மண் சரிவு சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா பகுதியில் கைவிடப்பட்ட குவாரியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மண் சரிவு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P