Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், அஸ்வினை கொலை செய்தவர்கள் ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் சடலத்துடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக இளைஞர்கள் வன்முறையை ஒரு மாஸ் செயலாகக் கருதி, கொலை செய்துவிட்டு ரீல்ஸ் எடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதாகவும், அதற்கு ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருட்களின் எளிய புழக்கமும் முக்கியக் காரணங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருள் மற்றும் மதுப் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இளைஞர்களை நல்வழிப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு 'ரீல்ஸ் அரசியலில்' கவனம் செலுத்துவதை விடுத்து, சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தவும், வன்முறைக் கலாச்சாரத்தை ஒடுக்கவும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam