Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திர அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில், இன்று (ஆகஸ்ட் 7) முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பொதுமக்கள் செல்லவும் வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.
பாபநாசம் வனச்சரகத்திற்குட்பட்ட அருள்மிகு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருவிழா முன்னேற்பாடு, பக்தர்களின் பாதுகாப்பு, தூய்மைப் பணிகள், போக்குவரத்து ஒழுங்கு மற்றும் வனத்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 16 வரை 10 நாட்கள் அகஸ்தியர் அருவி முழுமையாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக மூடப்பட்டிருக்கும்.
இந்தநிலையில் அகஸ்தியர் அருவி பகுதிக்குள் யாரும் செல்லவோ, குளிக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் தற்காலிக தடை நிறைவடையும். அதன் பின்னர், திருவிழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வனத்துறையின் அனுமதியுடன் அகஸ்தியர் அருவி மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழா காலத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் அறிவிப்பை பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN