Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பை தற்போதைய சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தன்னை விவசாயிகளின் காவலராக முன்னிறுத்தி பேசிய அதே நேரத்தில், சட்டமன்றத்திற்கு வெளியே ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டிருப்பது அரசின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தும், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும், வேளாண் நிதிநிலை அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாததால் ஏமாற்றமடைந்த விவசாயிகள், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளையும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்றும் முதலமைச்சரை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ