புலந்த்ஷஹரில் பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
புலந்த்ஷஹர், 09 ஆகஸ்ட் (ஹி.ச.) உத்திரப் பிரதேசத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று காலை வழக்கமான வாகன சோத
புலந்த்ஷஹரில் பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை


புலந்த்ஷஹர், 09 ஆகஸ்ட் (ஹி.ச.)

உத்திரப் பிரதேசத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று காலை வழக்கமான வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து இந்த என்கவுன்டர் நடந்துள்ளது.

இது குறித்து மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் கூறுகையில்,

இன்று மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சமூக விரோதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே என்கவுன்டர் நடந்தது. சோதனைக்காக நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தபோது, தாங்கள் சுற்றி வளைக்கப்படுவதை உணர்ந்த குற்றவாளிகள் நேரடியாக போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ஸ்வாட் குழுவைச் சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் காயமடைந்தனர், மேலும் இரண்டு அதிகாரிகள் அணிந்திருந்த குண்டு துளைக்காத கவச உடைகள் மீது தோட்டாக்கள் பாய்ந்தன. நிலைமையை மதிப்பிட்ட போலீசார் உடனடியாக தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு குற்றவாளி படுகாயமடைந்தார், மற்றொருவர் தப்பிச் சென்றார்.

என்று கூறினார்.

இரண்டாவது குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியதை அடுத்து, அவரை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், வெற்றுத் தோட்டா கூடுகள் மற்றும் குற்றவாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

காயமடைந்த குற்றவாளி உடனடியாக சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவிக்குப் பிறகு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

உயிரிழந்தவர் மோனு என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூர குற்றத்தில் தேடப்பட்டு வந்தவர் என்றும், அவரை கைது செய்ய 50,000 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி, வெற்றுத் தோட்டா கூடுகள், உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டதாகவும், தலைமறைவான குற்றவாளியை பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b