Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தொகுதி மறுவரையறை குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், தமிழ்நாட்டுக்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பது முதிர்ச்சியற்ற கருத்து என விமர்சித்துள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை என்பது தமிழ்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்றும், நாடு முழுவதும் அரசியலமைப்புச் சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 82 மற்றும் 170-வது பிரிவுகள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை அவ்வப்போது மறுசீரமைக்க வலியுறுத்துவதாகவும் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.
1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையை முடக்கியது மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காகவே என்றும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் “தண்டிக்கப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பிரதிநிதித்துவத்தை நிரந்தரமாக முடக்குவது நியாயமல்ல என்றும், தமிழ்நாடு மட்டும் தேசிய அரசியலமைப்பு செயல்முறையிலிருந்து நிரந்தர விலக்கு பெற வேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை எவ்வாறு நியாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து ஆக்கபூர்வமான விவாதத்தை நடத்துவதற்குப் பதிலாக, அமைச்சர் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் மலிவான அரசியல் கருத்துகளையும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியா முழுவதற்கும் நியாயமான, வெளிப்படையான, அரசியலமைப்புப்படி மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறைக்காக பாஜக உறுதியாக நிற்கும் என்றும் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P