Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பூர் உழவர் சந்தையை சுற்றி 100 மீட்டர் சுற்றளவிற்குள் எந்தவிதமான தற்காலிக கடைகளோ, நிரந்தர கட்டுமானங்களோ அமைக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.
ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி ஏராளமானோர் சாலையோரங்களிலும் நடைபாதைகளிலும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.
புகார்களைத் தொடர்ந்து இன்று காலை கள ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக உழவர் சந்தையின் நுழைவு வாயில் முதல் மத்திய பேருந்து நிலையம் வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகைகள், தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் தற்காலிக கட்டுமானங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் போக்குவரத்து சீரானதுடன், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b