Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருச்சி திருவரங்கம் அரங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தின் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதனை திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில முறைகேடு, பழனி கோவில் நில விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில முறைகேடு விவகாரத்தில் கடந்த ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விமர்சித்த அமைச்சர் ரமேஷ், த.வெ.க. அரசு பொறுப்பேற்றதும் 19 பேர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் திமுக ஆட்சியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்தார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதேபோல், பழனி கோவில் நில விவகாரத்திலும் புகார் எழுந்த உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் கூறினார். பழனி மற்றும் மதுரை கோவில் நில மோசடி விவகாரங்களில் அரசு தாமதமின்றி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்துவது தேவையற்றது எனக் கூறிய அமைச்சர், முதுநிலை கோயில்களில் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பிடங்கள்
செப்டம்பர் 1-ம் தேதிக்குள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P