Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை மயிலாப்பூரில் உள்ள மிக முக்கிய சாலைகளில் ஒன்றான ராதாகிருஷ்ணன் சாலையில் இன்று காலை திடீரென சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் திடீரென ஏற்பட்ட இந்த பள்ளத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த பள்ளத்தில் எந்த வாகனமும் சிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், பள்ளம் உள்ள பகுதியைச் சுற்றி தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை மாற்றி அமைத்தனர்.
இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஊழியர்கள் கான்கிரீட் கலவை கொண்டு பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் மழை அல்லது குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த பள்ளம் உருவாகியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழுது பார்க்கும் பணிகள் முடிந்த பின்னரே அப்பகுதியில் இயல்பான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b