Enter your Email Address to subscribe to our newsletters

சவுதி அரேபியா, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
சவுதி அரேபியாவின் ஜிசான் பகுதியில் அமைந்துள்ள அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சவுதி எரிசக்தி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டவுடன், சவுதி அராம்கோவின் தொழில்துறை தீயணைப்பு படையினர் மிக விரைவாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முழுமையாக அணைத்தனர்.
அவர்களின் இந்த துரிதமான மற்றும் திறமையான நடவடிக்கையால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதுடன், அங்கு பணிபுரிந்த ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தீயின் தீவிரம் கவலை அளிப்பதாக இருந்தபோதிலும், சம்பவ இடத்திலேயே இருந்த தீயணைப்பு குழுவினரின் சிறப்பான செயல்பாட்டால் நிலைமை விரைவாக சீரானது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
செங்கடல் கடற்கரையில், ஏமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஜிசான் சுத்திகரிப்பு நிலையம், சவுதி அரேபியாவின் மிக முக்கியமான எரிசக்தி கட்டமைப்புகளில் ஒன்றாகும்.
இது நாட்டின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து விரைவாக அணைக்கப்பட்டது அனைவருக்கும் நிம்மதியை அளித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b