Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
மனிதகுல முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உயரிய நோக்கில், டெக் பார் குட் -பில்ட் வித் ஏஐ
(TECH FOR GOOD – Build with AI) என்ற தேசிய அளவிலான புதுமைப் போட்டி ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாக்டர் ஜி.ஆர்.டி. கல்லூரியில் நடைபெறுகிறது.
டாக்டர் ஜி.ஆர்.டி. கல்வி நிறுவனங்கள், கூகுள் டெவலப்பர்ஸ் கிளப் - கோயம்புத்தூர், ஸ்டார்ட்அப் கல்ச்சர் மற்றும் தி கோவை கான் 26 ஆகியவை இணைந்து நடத்தும் இப்போட்டியில், தொழில்நுட்ப வளர்ச்சியை சமூக மேம்பாட்டிற்குப் பயன்படுத்தும் நோக்கில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
36 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெறும் இப்போட்டியில், 129 அணிகளைச் சேர்ந்த 459 இளம் புதுமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் தங்கள் அறிவாற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் படைப்பாற்றலை ஒருங்கிணைத்து சமூகப் பயன்பாட்டிற்கான ஏஐ தீர்வுகளை வடிவமைக்கின்றனர்.
இப்போட்டியானது,
நல்ல உடல்நலமும், நல்வாழ்வும்,
பசியற்ற உலகமும் பொருளாதார வளர்ச்சியும்,
நிலையான நகரங்களும் காலநிலை நடவடிக்கைகளும்,
வலிமையான மற்றும் பொறுப்புணர்வுமிக்க நிறுவனங்கள்
ஆகிய 4 முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
கல்வியுலகப் பேராசிரியர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரின் நேரடி வழிகாட்டுதலுடன் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
மாணவர்களின் புதுமைத் திறனை வளர்ப்பதோடு, சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் அரிய தளமாக அமையும் இம்மாநாடு, எதிர்கால இந்தியாவின் அறிவுசார் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரி தாளாளர் டாக்டர் டி. பத்மநாபன், செயலாளர் கீதா பத்மநாபன் மற்றும் முதல்வர் டாக்டர் டி. சந்தா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், துறைத் தலைவர் ராதாமணி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA