Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து முதன்முதலில் 'வெள்ளையனே வெளியேறு' என முழங்கிய மாமன்னராக போற்றப்படுபவர் பூலித்தேவன். அவரது வீரத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் அமைந்துள்ள மாவீரன் பூலித்தேவன் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ராஜீவ் ஆகியோர் கலந்து கொண்டு பூலித்தேவன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.
அதேபோல் பூலித்தேவரின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டு முன்பே அந்நியர் ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் வீரர் பூலித்தேவர் பிறந்தநாள்.
தன்னலத்தை விடுத்து தமிழ்நிலத்தின் தன்மானமே பெரிதெனக் கருதி ஏகாதிபத்திய எதிர்ப்புக் களத்தில் போரிட்ட மாவீரர் பூலித்தேவருக்கு என் புகழ் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b