Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 01 செப்டம்பர் (ஹி.ச.)
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் உறவினர் நிஹார் முகர்ஜியின் மகள் ப்ரிஸ்டி முகர்ஜி (28), பிர்பூம் மாவட்டம் ராம்புர்ஹாட் அருகே குசும்பா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்த நிலையில், அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, பலரது நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன.
அந்தப் பட்டியலில் ப்ரிஸ்டி முகர்ஜியின் பெயரும் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் தனது பணியை இழந்திருந்தார்.
பணியை இழந்தது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக அவர் மன அழுத்தத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ப்ரிஸ்டி முகர்ஜிக்கும் அவரது கணவருக்கும் இடையே விவாகரத்து தொடர்பான வழக்கு நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
வேலை இழப்பு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவரது மரணத்திற்கான சரியான காரணம் குறித்து தற்போது உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ராம்புர்ஹாட் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராம்புர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணைக்குப் பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P