Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச)
தமிழகத்தில் உள்ள 52 கோயில்களில் இன்று முதல் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, திருத்தனி, திருப்பரங்குன்றம், வடபழனி, குன்றத்தூர் ஆகிய முருகன் கோயில்கள், பெரியபாளையம், காஞ்சிபுரம், திருவேற்காடு, திருவல்லிக்கேணி, திருவெற்றியூர் வழியுடைய அம்மன் கோயில், வள்ளக்கோட்டை முருகன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன், கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய 52 கோயில்களில் இன்று முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளதாவது,
இன்று (01-09-2026) முதல், ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் மொபைல் போன்களுக்கு தடை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோக்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது கேமரா வசதியுடன் கூடிய கைப்பேசிகளை முடிந்தவரை தங்களது வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், கைப்பேசிகளை திருக்கோயில்களில் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவசரகாலத் தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நமது திருக்கோயில்களில் ஆரோக்கியமான, அமைதியான மற்றும் ஆன்மிகமான வழிபாட்டுச் சூழலை உருவாக்க பக்தர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. அனைவரும் ஒன்றிணைந்து, நமது திருக்கோயில்களில் சிறப்பான வழிபாட்டுச் சூழலை உருவாக்கிடுவோம்
எனத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b