Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 01 செப்டம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் சில்லறையாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கீழக்கரை கருப்பட்டி முனியசாமி கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்தை சுற்றிவளைத்த போலீசார், அங்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷரிக் அஹ்மது, நிஜந்தன், அஜய்குமார், அப்துல் ரகுமான் ஆகிய 4 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, கீழக்கரை பகுதியில் சில்லறை விற்பனை செய்வதற்காக அவர்களிடம் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இதன் பின்னணியில் மேலும் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN