Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 01 செப்டம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடை ஒன்று பூட்டப்பட்டிருந்த நிலையில், திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
கடைக்குள் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீயில் சிக்கியதால், அவை ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்கத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ஏராளமான பட்டாசுகள் எரிந்து நாசமாகின. கடை பூட்டப்பட்டிருந்ததால், இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam