Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 01 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா பா.ஜ.க. மாநில தலைவர் ராம்சந்தர் ராவ் கைது செய்யப்பட்டதற்கு மத்திய மந்திரி பண்டி சஞ்சய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும், போராட்டம் நடத்தவும் சென்ற பா.ஜ.க. தலைவர்களை போலீசார் தடுத்து கைது செய்திருப்பது காங்கிரஸ் அரசின் திவால்தனத்தை வெளிப்படுத்துகிறது.
நல்கொண்டா மாவட்ட பா.ஜ.க. தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியவர்கள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இதேபோல், ஐதராபாத்தில் உள்ள பா.ஜ.க. மாநில அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் ஏன் கைது செய்யவில்லை? தாக்குதல் நடத்துபவர்களை பாதுகாத்துவிட்டு, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்குவதுதான் காங்கிரஸ் கூறும் ‘இந்திரம்மா ராஜ்யமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
போலீசாரை பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர்கள் தெலுங்கானாவில் அராஜக அரசியல் நடத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கைது செய்யப்பட்ட பா.ஜ.க. மாநில தலைவர் ராம்சந்தர் ராவ் மற்றும் மற்ற தலைவர்களை உடனடியாக எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்.
இல்லையென்றால், காங்கிரஸ் அரசு எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இனிமேல் நடைபெறும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் காங்கிரஸ் அரசும், போலீசாருமே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பண்டி சஞ்சய் எச்சரித்தார்.
மேலும், கடந்த காலத்தில் பி.ஆர்.எஸ். அரசுக்கு ஏற்பட்ட நிலை விரைவில் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு பண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA