கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
பெலகாவி, 10 செப்டம்பர் (ஹி.ச.) கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகளில் பெலகாவியில் அமலாக்கத்துறை இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தியது. சட்டவிரோத வெளிநாட்டு முதலீடு தொடர்பான விசாரணையுடன் தொட
கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை


பெலகாவி, 10 செப்டம்பர் (ஹி.ச.)

கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகளில் பெலகாவியில் அமலாக்கத்துறை இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தியது.

சட்டவிரோத வெளிநாட்டு முதலீடு தொடர்பான விசாரணையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த சோதனைகள் நேற்றும் நடைபெற்றது.

கோகாக் நகரில் உள்ள ஜார்கிஹோளியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அவரது மனைவி மற்றும் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா ஜார்கிஹோளி ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

மேலும், பெலகாவியில் உள்ள ஜார்கிஹோளியின் குடும்ப உறுப்பினர் ஒய்.மஞ்சுநாத் வீடு, அமைச்சரின் நெருங்கிய கூட்டாளி என அறியப்படும் கிரீஷ் சோனாவால்கர் வீடு மற்றும் ஜார்கிஹோளியின் தனிச் செயலாளர் மாலகவுடா பாட்டீல் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்த அவர், ஜார்கிஹோளியை குறிவைத்து நடத்தப்படும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு நிறுவனங்களை பா.ஜ.க தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறிய சிவகுமார், அவருக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைகள் குறித்து எங்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. இதற்கு முன்பும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவர் ஒரு மூத்த அமைச்சர், வணிகம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சில சமூக சேவை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.

அமைச்சர் பிரியங்க் கார்கேவும் இந்த சோதனைகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

அமலாக்கத்துறை சோதனைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. கடந்த ஆறு ஆண்டுகளில் 196 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, ஆனால் இரண்டு வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. சோதனைகளில் 97 சதவீதம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டுள்ளன.

பா.ஜ.க தலைவர்களை வைத்து அல்லாமல், சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை வைத்து அடுத்த தேர்தலை நடத்த அவர்கள் விரும்புகிறார்கள். இவை மத்திய அரசால் தூண்டப்படும் சோதனைகள்.

இந்த அமைப்புகள் தங்கள் எஜமானர்களால் கட்டுப்படுத்தப்படும் கிளிகள் போன்றவை என்றும் அவர் மேலும் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b