Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி (தனி) இடைத்தேர்தல், வரும் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெற உள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளை நேர்மையாகவும் வெளிப்படையான முறையிலும் கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு கண்காணிப்புக் குழுக்களையும் மேற்பார்வையாளர்களையும் நியமித்துள்ளது.
அந்த வகையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் பணிகளைக் கண்காணிக்க மூன்று மேற்பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் சுமூகமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் பொது மேற்பார்வையாளராக போர் சிங் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொகுதியில் சட்டம் - ஒழுங்கை பராமரித்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக காவல் மேற்பார்வையாளராக கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கவும், பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கவும் செலவின மேற்பார்வையாளராக வாவல் வைபவ் பாலா சாகிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள மூன்று மேற்பார்வையாளர்களும் விரைவில் மதுராந்தகம் தொகுதியில் பணியைத் தொடங்கி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வார்கள் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b