Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரப் பிரதேசம், 10 செப்டம்பர் (ஹி.ச.)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து முழுமையாக நீக்குவதாக இன்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது கட்சியில் இருந்தே முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆகாஷ் ஆனந்தும் அவரது மாமனார் அசோக் சித்தார்த்தும் பகுஜன் இயக்கத்தை விட தனிப்பட்ட மற்றும் குடும்ப நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக மாயாவதி விமர்சித்துள்ளார்.
முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யான அசோக் சித்தார்த், தான் அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே மாயாவதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆகாஷ் ஆனந்த் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டுமானால், அவரது மாமனார் சித்தார்த் முழுமையாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என மாயாவதி முன்னதாக நிபந்தனை விதித்திருந்தார்.
சித்தார்த் ஓய்வு பெறுவதாக அறிவித்த போதிலும், ஆகாஷ் ஆனந்தை அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க மாயாவதி முடிவு செய்துள்ளார்.
தனது முந்தைய அறிக்கையை ஆகாஷ் ஆனந்த் எக்ஸ் தளத்தில் மறுபகிர்வு செய்யாததையும் மாயாவதி சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். முன்னதாக தனது விசுவாசத்தை காட்ட தனது பதிவுகளை விரைவாக பகிர்ந்து வந்த ஆனந்த், இந்த முறை அது அவரது சொந்த நலனுக்கான விஷயமாக இருந்தபோதும் அதை செய்யவில்லை என்றும், இது அவரது முன்னுரிமை கட்சியை விட குடும்பம் மற்றும் தனிப்பட்ட நலன்களில் இருப்பதையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மை அரசை அமைக்கும் கட்சியின் இலக்கில் பிஎஸ்பி தொண்டர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
ஆகாஷ் ஆனந்தின் மாமனாரான சித்தார்த், கட்சிக்குள் கோஷ்டி பூசலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு மார்ச் மாதம் பிஎஸ்பியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் செப்டம்பர் மாதம் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.
ஆகாஷ் ஆனந்த் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, மேலும் முதிர்ச்சி பெற வேண்டிய அவசியத்தை காரணம் காட்டி செப்டம்பர் 3-ம் தேதி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b