Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 10 செப்டம்பர் (ஹி.ச.)
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த நான்கு நாட்களாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் அலட்சியமாக பதிலளிப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பணிக்குத் திரும்புமாறு அதிகாரிகள் எச்சரிப்பதாகவும் தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தால் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / vidya.b