Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து கோவை மற்றும் தென்காசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூர் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் நாளை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் போத்தனூரில் இருந்து செப்டம்பர் 14-ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு மற்றொரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6.15 மணிக்கு தென்காசியை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து செப்டம்பர் 14-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
பண்டிகை காலத்தில் ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b