Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவனை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது எத்தனை வழக்குகள் விசாரணையில் நிலுவையில் உள்ளன, அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விரிவான தகவல்களைச் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நீதிமன்றம் பரிசீலித்தது.
இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் விசாரணை நிலை குறித்து விசாரித்து, வரும் 23-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவனை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ