மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவாரா? - நந்திகிராமில் மீண்டும் களம் இறங்குவாரா? கட்சியினர் எதிர்பார்ப்பு
கொல்கத்தா , 10 செப்டம்பர் (ஹி.ச.) மேற்கு வங்காளத்தில் ரெஜினகர், நந்திகிராம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்
A


கொல்கத்தா , 10 செப்டம்பர் (ஹி.ச.)

மேற்கு வங்காளத்தில் ரெஜினகர், நந்திகிராம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரெஜினகர் தொகுதியில் வெற்றி பெற்ற ஹுமாயூன் கபீர் எம்.எல்.ஏ. பதவி விலகியதால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் தொகுதி எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இதில் அவர் 9,665 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது அதே தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், மம்தா மீண்டும் நந்திகிராமில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்சியினர் விருப்பம்

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சியும், திரிணாமுல் காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்களும் அந்த கட்சிக்கு சவாலாக உள்ளன. எனவே, மம்தா பானர்ஜி நேரடியாக தேர்தல் களத்தில் இறங்க வேண்டும் என்று கட்சியினர் விரும்புவதாக கூறப்படுகிறது.

மம்தா எம்.எல்.ஏ.வாக இருந்தால், சட்டசபையில் மக்கள் பிரச்சினைகளை வலுவாக எழுப்புவதுடன், கட்சியையும் வலுப்படுத்த முடியும் என்று நிர்வாகிகள் கருதுகின்றனர்.

2 தொகுதிகளும் சாதகமா?

நந்திகிராம் தொகுதி மம்தா பானர்ஜிக்கு சாதகமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், ரெஜினகர் தொகுதியில் சுமார் 65 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதால் அந்த தொகுதியும் திரிணாமுல் காங்கிரசுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 2 தொகுதிகளிலும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது திரிணாமுல் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும் என்று அக்கட்சியின் சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால், இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுவாரா? குறிப்பாக, கடந்த தேர்தலில் தோல்வியடைந்த நந்திகிராமில் மீண்டும் களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு மேற்கு வங்க அரசியலில் ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA