Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று
(செப்டம்பர் 11) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (United Forum of Bank Unions) சார்பில் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை (PLI) மறுபரிசீலனை செய்ய வேண்டும், பணித்திறன் ஆய்வு உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இதன் காரணமாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் உட்பட நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தொடர்ந்து இன்று வேலை நிறுத்தம் நடைபெறுவதால் வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். கடந்த 23-ம் தேதி மத்திய தொழிலாளர் ஆணையருடன் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்தே இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b