Enter your Email Address to subscribe to our newsletters

எடப்பாடி, 11 செப்டம்பர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே லாரியில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
எடப்பாடி மசையன்தெரு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் லாரியில் 31 மூட்டைகளில் சுமார் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதாகக் கூறி, லாரி ஓட்டுநரான ஈரோடு மாவட்டம் பவானி காளிங்காராயன்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (27), ஆறுச்சாமி (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் லாரியுடன் கைது செய்யப்பட்ட இருவரும் சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ