Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில், உயர் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பிரமாண்டமான குறைகடத்தி பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
செமி கண்டக்டர் துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலம் பகுதியில் குறைகடத்தி மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. சுமார் 175 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த பூங்கா உருவாக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடியும் என அரசு எதிர்பார்க்கிறது.
இந்த திட்டத்திற்காக சுமார் 8.3820 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் என நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். விமான நிலைய திட்டத்திற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்தே இந்த பூங்காவிற்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்மொழியப்பட்ட இந்த பூங்காவில் வெறும் உற்பத்தி ஆலை மட்டுமின்றி, செமி கண்டக்டர் ஆலையுடன் இணைந்ததாக அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
இதன் காரணமாக இது ஒரு முழுமையான தொழில்நுட்ப சூழல் அமைப்பாக உருவாகும். இந்த பூங்கா செயல்பாட்டுக்கு வரும்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b