Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னையில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், மழைநீர் தேங்காமல் தடுக்கவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அமைந்தகரை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் சேகர் விஜய் பாலாஜி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ஆணையர், மண்டல அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களும் உடனிருந்தனர்.
மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அமைச்சர் விரிவான அறிவுரைகளை வழங்கினார்.
குறிப்பாக மழைநீர் வடிகால்களில் அடைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும், பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும், நிவாரண மையங்களை தயார்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b