தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை
பரமக்குடி, 11 செப்டம்பர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி பரமக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவது
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை


பரமக்குடி, 11 செப்டம்பர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி பரமக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் அவரது நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பரமக்குடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மணிமண்டப வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் மற்றும் மணிமண்டபத்தில், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனையொட்டி பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Hindusthan Samachar / vidya.b