Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
பாட்டுக்கொரு புதல்வனாய் தமிழுக்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்த மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கியுள்ளார்.
இது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர் கூறியிருப்பதாவது,
தம் வாழ்நாளைத் தேசப் பணிக்கும் தமிழ்த் தொண்டிற்கும் அர்ப்பணித்த பாரத அன்னையின் தவப்புதல்வர், பாட்டுப் புலவன் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தி வணங்கினேன்.
“பாரத நாடு பழம்பெரும் நாடு – நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என இந்தியப் பெருநாட்டின் ஒற்றுமையையும் பெருமையையும் பாடியவர்.
“மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்” என மொழியின் ஆற்றலைப் போற்றிய பாரதியாரின் சொற்கள், காலம் கடந்தும் நம் மனங்களில் அதே வீரியத்துடன் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. தேசப்பற்று, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய உயரிய விழுமியங்களைத் தம் கவிதைகளாலும் வாழ்வாலும் எடுத்துரைத்த மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றுவோம்.
அவர் கண்ட கனவுகளை நனவாக்கி, ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த வலிமையான பாரதத்தை உருவாக்குவதில் நாம் அனைவரும் தொடர்ந்து பங்களிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b