Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றி, அதற்கான பெயர்ப் பலகைகளை மாற்றும் பணியில் அரசு கவனம் செலுத்துவதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
நிர்வாகத் திறனற்ற அரசு, பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை என விமர்சித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கான பெயர்ப் பலகைகளை மாற்றுவதற்கான செலவையும் ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெயர்ப் பலகையை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், மாற்றியதற்கான ஆதாரமாக புதிய பெயர்ப் பலகையுடன் நின்று புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் கூறப்படுவதாக அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் மீது இதுபோன்ற கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துவதையும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெயர் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு செலவிடும் கவனத்தை விடுத்து, அரசு நிர்வாகத்தின் முறையான செயல்பாடுகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கீட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ