தேர்வு எழுத சென்ற மணப்பெண் சாலை விபத்தில் பலி
திண்டுக்கல், 12 செப்டம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த ஜெபபாஸ்டின் ( வயது 29 ) இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல் மகள் மரிய
தேர்வு எழுத சென்ற மணப்பெண் சாலை விபத்தில் பலி


திண்டுக்கல், 12 செப்டம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த ஜெபபாஸ்டின்

( வயது 29 ) இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல் மகள் மரிய வெல்சியா (26) என்பவருக்கும் வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் நாளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை மதுரையில் செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணமகள் வெல்சியாவை மணமகன் ஜெப பாஸ்டின் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு அதிகாலை சென்று கொண்டிருந்தார்.

அதிகாலை 3 மணிக்கு திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் சாணாம்பட்டி பிரிவு அருகே அவர்கள் சென்ற போது கோவையில் இருந்து மதுரைக்கு சென்ற காரின் முன்புற டயர் திடீரென வெடித்து தாறுமாறாக ஓடியது. கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீது மோதியது.

இதில் ஜெப பாஸ்டினும், மரிய வெல்சியாவும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மரிய வெல்சியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் காயமடைந்த மணமகன் ஜெபபாஸ்டின் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் கண் முன்னே மணப்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b