தமிழக அரசின் கனிமவளத் தடையை கண்டித்து சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்
தென்காசி, 12 செப்டம்பர் (ஹி.ச) தமிழ்நாட்டில் நிலவும் கனிம வளத் தேவையை பூர்த்தி செய்யவும், சட்டவிரோத கடத்தலை தடுக்கவும் ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் மற்றும் கருங்கல் போன்ற கனிமங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு கடந்த ஜூலை 27, 2026
தமிழக அரசின் கனிமவளத் தடையை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்


தென்காசி, 12 செப்டம்பர் (ஹி.ச)

தமிழ்நாட்டில் நிலவும் கனிம வளத் தேவையை பூர்த்தி செய்யவும், சட்டவிரோத கடத்தலை தடுக்கவும் ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் மற்றும் கருங்கல் போன்ற கனிமங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு கடந்த ஜூலை 27, 2026 அன்று 3 மாத கால இடைக்காலத் தடை விதித்தது.

இந்த உத்தரவு தொடர்பாக லாரி உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள தடையை கண்டித்து தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச் சாவடி அருகே சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தமிழக அரசின் இந்த ஒருதலைப்பட்சமான தடை உத்தரவால் கேரள மாநிலத்தில் கட்டுமானப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் இருந்து முறையான அனுமதியுடன் கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் ஆரியங்காவு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கனிம வளங்கள் தடையின்றி கேரளாவிற்கு தொடர்ந்து கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்கள் நலன் கருதி தமிழக அரசு தனது தடை உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Hindusthan Samachar / vidya.b