Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
பட்டிமன்ற உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (90 ) வயது மூப்பு காரணமாக நேற்று மதுரையில் காலமானார்.
தமிழ் இலக்கியத்தை கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரான இவரது மறைவு தமிழுலகிற்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.
இவரது மறைவுக்கு முதலமைச்சர், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தமிழறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக திமுக எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த தகவலை அமைச்சர் நிர்மல் குமார் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, மறைந்த சால்மன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை வழங்கப்படுமா என்று அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மறைந்த சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி விருப்பப்படி அவரது உடல் இன்று மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
அங்கு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b