Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 12 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் கிருஷ்ணகிரி உட்பட 12 மாவட்டங்களில் எல் நினோ பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தவறாகப் புரிந்துகொண்டு சிலர் கிருஷ்ணகிரி வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்டத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து, குறைந்த நீரில் விளையக்கூடிய சிறுதானியங்கள், பயறு வகைகள் போன்ற மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதன் மூலம் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதுடன், விவசாயத்தில் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்களும், விவசாயிகளும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b