Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தனித் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் பின்பற்ற வேண்டிய அரசியல் நிலைப்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று ஆலோசனை நடத்துகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று இணையவழியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்தாலும், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இல்லாத காரணத்தால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்டமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக தனது வேட்பாளர்களாக மதுராந்தகத்தில் ஐ.பரந்தாமனையும், தாராபுரத்தில் எஸ்.சுகன்யாவையும் அறிவித்துள்ளது. அதிமுகவும் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.
இந்த பின்னணியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை கடைபிடித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்தும், தொகுதிகளில் கட்சியின் பங்களிப்பு குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b